“எனக்கு இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் சுத்தமா பிடிக்காது, மனோ ” என்று பாப்கார்ன் கொறித்தபடி பவி சொன்னதும் அவளை இன்னும் தீர்க்கமாக காதலிக்க வேண்டும் போலிருந்தது மனோவிற்கு.
‘அய்யோ.. ஸேம் பிஞ்ச் பவி.. உனக்கு தான் தெரியுமே எனக்கும் சின்ன வயசிலிருந்தே கத்திரிக்காய் பிடிக்காது! ஆனா இந்த காதல் மட்டும் ரொம்ப பிடிக்கும்.. இதோ இப்ப கூட உன்ன.. உன்ன ரொம்ப பிடிச்சிட்டேயிருக்கு..I think I lov.. ‘
‘மனோ.. என்ன விளையாடுறியா?’
‘மதர் ப்ராமிஸா ஐ லவ் யூ பவி!’
‘சுத்த பேத்தல்!’என்று பவி முறைக்க படப்படவென சிரித்தான், மனோ.
‘இப்ப எதுக்கு கெக்கேபெக்கேன்னு சிரிக்கிற நீ!’
“பவி.. உன் உதடு சும்மா ரீல் விடுது! ஆனா உன் கண்ணு இருக்கே! அத பாத்தேன்.. ரசிச்சேன்.. சிரிச்சேன்”!
“நான்சென்ஸ்.. I am a strong independent woman! இந்த காதல் இத்யாதியெல்லாம் எனக்கு செட் ஆகாது!”
“இரு இரு.. Independent womanக்கும் நாம காதலிக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?”
“ப்ச்.. உனக்கு புரியாது.. என்னால நீ கூப்பிட்ட இடத்துக்கு எல்லாம் ஈன்னு வர முடியாது.. !”
“நான் எங்க கூப்பிட்டேன்.?!”
“இதோ இன்னிக்கு கூட திடுதிடுப்ன்னு ‘ வா எனக்கு பிடிச்ச படம் ரீரிலீஸாகிருக்கு.. அதிகமா கூட்டம் இருக்காது.. பாத்துக்கிட்டே மனசு விட்டு பேசலாம்’ன்னு தியேட்டருக்கு வர்ற வச்சிருக்க.. அதுவும் இந்த க்ரிஞ்ச் படத்துக்கு..!”
“அடிப்பாவி.. இந்த காவியத்த போய் க்ரிஞ்ச்ங்கறியே! ‘மனோகரா! இது செட் ஆகாது போலயே”! என்று பவி காதுபட அவன் முணுமுணுக்க சுறுக்கென கடுகடுத்த பவியின் முசுடு முகத்தை அப்படியே தன் மனதிற்குள் நிழற்படமெடுத்து நினைவாக்கினான், மனோ.
“ஹாஹா! லுக் அட் யூ.. ! சரி .. காதலுக்காக யார்யாரோ என்னென்னவோ தியாகம் பண்றாங்க .. என்னோட பவிக்காக இந்த மனோகரன் அவனுக்கு பிடிச்ச கர்ணன தியாகம் பண்ண மாட்டானா.. கர்ணா ப்ளீஸ் ஃபர்கிவ் திஸ் சைல்ட்!!” என்றான் மனோ.
“என்ன பெரிய கர்ணன்.. he is a sexist தெரியுமா..?!”
“இது எப்போத்துல இருந்து.. ?!”
“யூ நோ.. திரௌபதிய சபைக்கு இழுத்துட்டு வந்து Harass பண்ணுறச்சே ‘உனக்கு தான் ஆல்ரெடி அஞ்சு புருஷனாச்சே.. ஆறாவதா என் தொடை மேல வந்து உக்காறதுல உனக்கு என்ன கூச்சம்’ன்னு முதல் முதல்ல இன்ஸல்ட் பண்ண ஆரம்பிச்சதே தோ உங்க அருமை ஹீரோ தான்!” படபடத்தாள் பவி.
“இப்படியொரு ஸீன் படத்துல இல்லயே! “
“எப்படி இருக்கும்..? இருந்தா பேட்ரியாரிக்கல்- ஹீரோயிஸத்துக்கு இடிக்குமே!”
“ஓ லிஸ்ட்ல பேட்ரியார்க்கி வேற உண்டா ?” சிரித்தான் மனோ!
“சிரிக்காத மனோ ! ஸீரியசா பேசறேன்.. !”
“சாரி நீ..சொல்லு”
“எங்க விட்டேன்?”
“Patriarchy patriarchyல!” எடுத்துக்கொடுத்தான்.
“ஆஹ்ங்.. கரெக்ட்.. ஸோ நீ கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் என்னால வரமுடியாது! அத பண்ணு இத பண்ணு ஆர்டரெல்லாம் செட்டே ஆகாது”!
“நான் அதெல்லாம் சொல்லவே இல்லயே.. !”
“ஒரு வேளை சொன்னா ??!”
“ஷ்.. இருஇரு ஒரு முக்கியமான ஸீன் வரப்போகுது !” என்று பவியை படத்திரையைப் பார்க்கும்படி கண்ணசைத்தான் மனோ.
“என்ன ஸீன் ?”
“‘எடுக்கவா கோர்க்கவா’ ஸீன் “
“அப்படின்னா? “
“அடிப்பாவி.. இந்த ஸீன் பாத்ததில்லயா.. ?”
“ம்ஹூம்!”
“சரியா போச்சு போ! ஒட்டு மொத்த பாய் பெஸ்டிக்கான எதிக்ஸே இந்த ஸீன்ல தான்.. ஜஸ்ட் வாட்ச்!”
திரையில் சிவாஜி கணேசனும் சாவித்திரியும் ஈஸ்ட்மேன் கலரில் பிரகாசமாக தாயம் ஆடிக்கொண்டிருந்தார்கள்!
“துரி wife’ம் கர்ணனும் ப்ரெண்ட்ஸா?” துறுதுறுத்தாள் பவி.
“ஷ்ஷ் ஆமா.. ஆமா!”
இப்ப என்னாச்சுன்னு கர்ணன் இவ்வளவு டென்ஷனாகுறாரு?
“ம்.. பேச்சு வாக்குல உன் கன்சென்ட் இல்லாம என் கை பட்டா நீ என்ன பண்ணுவ!’
“உதை பின்னிடுவேன்..!’
‘ஆத்தாடி! என்னா கோவம்! யம்மா.. அவரு அவரோட ஃப்ரென்ட் வைஃப்ப விளையாட்டா பிடிச்சு இழுத்துட்டாரு.. ஒரு மனுஷனுக்கு அந்த ஷாக் இருக்குமா இருக்காதா?!
‘சரி சாரி தெரியாம பண்ணிட்டேன்னு சொல்லலாம்ல.. ஓ சொல்றதுக்குள்ள தான் ஹஸ் இஸ் ஆன் தி வே யா!”
‘ஷப்பா இதென்னடா இண்டிபென்டென்ட் வுமன்க்கு வந்த சோதனை’ என முனகினான் மனோ.
‘என்ன சொன்ன?!’
‘படத்தை பாருங்கன்னு சொன்னேன்ங்க மேடம்!’
‘ஆஹ் அது!’
‘சிதறிய முத்துக்களை நான் எடுக்கட்டுமா கோர்க்கட்டுமா? உன்னையும் என் மனைவியையும் நன்கு அறியாதவனா நான் “ என அலட்டிக்கொள்ளாமல் திரையில் ஃபெமினிஸம் பேசிக்கொண்டிருந்த அசோகனை பார்த்து ‘அப்படி போடு! செம தலைவா ! ‘ என முன்னிருக்கை பக்கத்திலிருந்து குழறியபடி ஒரு குரல் கேட்டது். பதிலுக்கு தியேட்டரின் இன்னொரு திசையிலிருந்து ஜிவ்வென விசில் சத்தம் பறக்க கூட மனோவும் சேர்ந்துக்கொள்ள பவிக்கு வேடிக்கையாயிருந்தது!
“பாத்தியா.. ஒரு நல்ல நண்பனா மட்டுமில்ல நல்ல கணவனாகவும் இருக்கறது எவ்வளவு முக்கியம்னு அசால்ட்டா சொல்லிட்டாங்க.. ஓல்ட் இஸ் கோல்ட்டும்மா!” என்றான் மனோ.
“இன்ட்ரெஸ்டிங்.. அது சரி , தன்னோட மனைவிய இந்தளவுக்கு மதிக்குற ஒருத்தர் பின்னாடி ஏன் திரௌபதிய மட்டும் அத்தன பேர் முன்னாடி ஹாரஸ் பண்ணுறாராம்.. ?!” படக்கென கேட்டாள் பவி!
“சுழி யார விட்டது! பவி ,உலகத்துல நாம பாக்குற எல்லா மனுஷங்ககிட்டயும் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும்.. நமக்கு தேவையான நல்லத விட்டுட்டு கெட்டத அவங்களோடவே விட்டுடறது தான் பெஸ்ட் சாய்ஸ்!’
“எப்படி.. நான் ஆசை ஆசையா ஆர்டர் பண்ணின மீன் ஃப்ரைல மீன அலேக்கா அள்ளி சாப்டுட்டுட்டு அதோட முள்ள மட்டும் என் ப்ளேட்ல தள்ளுவியே அது மாதிரியா?!”
“எக்ஸாட்லீ.. ஸீ வீ கம்ப்ளீட் ஈச் அதர்.. லவ்யூ பவி என வாயெடுத்த மனோவை மீண்டும் முறைத்தாள் பவி. இந்த முறை செல்லமாக!
“முறைக்காதம்மா.. உண்மையத்தான சொன்னேன் சரிசரி படத்த பாரு!”என்று படத்திற்குள் நுழைந்தவனை முதல் முறையாக ரசித்துப் பார்த்தாள் பவி.
சென்னையில் வேலைக்கு சேர்ந்த முதல் நாளில் ஒரு தேநீர் இடைவெளியின் போது எதார்த்தமாக சந்தித்துக்கொண்டதில் தொடங்கிய மனோவுடனான நட்புக்கு இன்றோடு ஏறக்குறைய ஆறு வயதிருக்கும். அந்த முதல் தேநீரிலிருந்து வேலை, மேல்படிப்பு, முக்கியமான சில முடிவுகள் என எத்தனையோ விஷயங்களை இருவரும் சேர்ந்தே கடந்து வந்திருக்கிறார்கள்.
‘ மனசுக்கு பிடிச்சத பண்றதுக்கு ஏன் இவ்வளவு யோசிக்கிற.?’ என ஒரு நாள் மனோ கேட்ட போதே அவனை ஃ்ப்ரென்ட் ஸோனிலிருந்து மானசீகமாக விடுவித்திருந்தாள், பவி. சிறுக சிறுக சேமித்த பணத்திலிருந்து அவள் திட்டமிட்டது போலவே ஒரு குட்டி டாட்டூ ஸ்டூடியோவுக்கு அவள் முதலாளியானதும் அப்போது தான். அரவணைக்க பெற்றோரோ உறவுகளோ காசுபணமோ இல்லாத சூழலில் படிப்பும் உழைப்பையும் மட்டுமே மூலதனமாக வைத்து முன்னேற துடிக்கும் அவளின் பார்வையிலிருந்து ஒரு முறை கூட இதுவரை கண்ணியம் தவறினதில்லை மனோ. அதனாலயே மனோ என்றால் அவளுக்கு பிரியம் அதிகம்.
‘ஸோ ஒய் நாட் ? தனக்குள்ளே கேட்டாள், பவி!
‘கூப்பிட்டியா?’ என்றபடி அவள்பக்கம் திரும்பினான் மனோ..
‘ஆத்தி மைன்ட்வாய்ஸ்ன்னு சத்தமா கேட்டுட்டானா?!’ என உதட்டை கடித்துக்கொண்டு, ‘இல்லயே நீ படத்த பாரு..!’ என்று அன்றுவரை அவர்களின் பயணத்தை மனதிற்குள் ஜாலியாக அசைப்போட ஆரம்பித்தாள், பவி.
ஒரு கட்டத்தில் தன் விருப்புவெருப்புகளை அசட்டைத்தனங்களை அடத்தை அன்பை அப்பழுக்கில்லாத தன் சுயத்தை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்த இந்த உலகத்திலேயே அவனிடம் மட்டுமே முடியும் என்று தீர்க்கமான எண்ணம் எழவும் அவளை அறியாமலே அவள் கரங்கள் மெல்ல அவன் கரங்களை பற்றின. படத்தில் லயித்திருந்த மனோவின் தோளில் சாய்ந்தபடியே கண்களை மூடி அசந்துப்போனாள் பவி. வெகு நேரம் கழித்து மிக அருகே விசும்பல் சத்தம் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி!
“மனோ.. அழுவுறியாடா?!” என்றாள்.
“விசும்பிக்கொண்டே ‘ம்’ கொட்டினான், மனோ!
“அடப்பாவி ஏன்?!”
“பாவம்.. எல்லாரும் சேர்ந்து கொண்ணுட்டாங்க..!”
‘யார்ற?!” என்று பவி கேட்ட அதே வேளையில் செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து என உச்சஸ்தாதியில் உணர்ச்சி பொங்க ஆரம்பித்தார், சீர்காழி.
‘ச்ச எத்தன வாட்டி பாத்தாலும் கண்ணு கலங்கி தொலையுது!’ என்று அலுத்துக்கொண்டான், மனோ.
சத்தமாக சிரித்தாள் பவி.
‘சேடிஸ்ட்! அழுவும்போது சிரிக்கிறியே?!’
‘ஹாஹா.. ஸோ க்யூட்..மனோகரா ஐ லவ் யூ டா!’ என்று பவி வாஞ்சையாய் மனோவின் கன்னத்தை கிள்ளவும் இத்தனை நாள் காத்திருப்பின் பலனை சற்றும் எதிர்ப்பார்க்காதவனாய் அவளை கட்டிப்பிடித்து அழுத்தொடங்கினான் மனோ. தியேட்டரே சோகத்தில் ஆழ்ந்திருக்க தனது வாழ்நாள் சந்தோஷத்தை அடக்க முடியாதவளாய் மனோவின் லினன் ஷர்ட்டுக்குள் முகம் புதைத்து வெடித்து சிரித்தாள் பவி!
